மான்கூர்டில் சிவசேனா எம்.எல்.ஏ.வை கொல்ல முயற்சி ஆதரவாளர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி


மான்கூர்டில் சிவசேனா எம்.எல்.ஏ.வை கொல்ல முயற்சி ஆதரவாளர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 14 Oct 2018 12:00 AM GMT (Updated: 13 Oct 2018 10:26 PM GMT)

மான்கூர்டில் கும்பல் நடத்திய தாக்குதலில் சிவசேனா எம்.எல்.ஏ. உயிர் தப்பினார். அவரது ஆதரவாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மும்பை, 

மான்கூர்டில் கும்பல் நடத்திய தாக்குதலில் சிவசேனா எம்.எல்.ஏ. உயிர் தப்பினார். அவரது ஆதரவாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சிவசேனா எம்.எல்.ஏ.

மும்பை அணுசக்தி நகர் ெதாகுதி எம்.எல்.ஏ. துக்காராம் காட்டே. சிவசேனாவை சேர்ந்தவர். இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது அவரது மெய்காவலர்கள் மற்றும் ஆதரவாளர்களும் உடன் வந்திருந்தனர்.

பின்னர் அங்கிருந்து துக்காராம் காட்டே வீடு திரும்பி கொண்டிருந்தார். மான்கூர்டு பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் ஆவேசமாக வந்தது. அவர்களில் ஒருவர் கையில் பெரிய வாள் வைத்திருந்தார்.

தாக்குதல்

திடீரென அந்த கும்பலை சேர்ந்தவர்கள் துக்காராம் காட்டே எம்.எல்.ஏ.வை தாக்கினார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மெய்காவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்த கும்பலை தடுக்க முயன்றனர். இதில் துக்காராம் காட்டேயின் ஆதரவாளர் ஒருவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கு அதிகளவில் ஆட்கள் வந்ததால் அந்த கும்பலினர் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்த கொலை வெறி தாக்குதலில் துக்காராம் காட்டே அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார். அவரது ஆதரவாளர் ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் போட்டு சென்ற வாளை கைப்பற்றினர். என்ன காரணத்துக்காக துக்காராம் காட்டே தாக்கப்பட்டார் என்பதும், அவரை தாக்கிய கும்பல் யார் என்பதும் உடனடியாக தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி உள்ளனர். மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்களை பிடிப்பதற்காக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story