திருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியை தாக்கி 12 பவுன் நகை பறிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு


திருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியை தாக்கி 12 பவுன் நகை பறிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Oct 2018 10:29 PM GMT (Updated: 13 Oct 2018 10:29 PM GMT)

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியை தாக்கி 12 பவுன் நகை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

அடையாறு,

சென்னையை அடுத்த பல்லாவரம், தர்கா சாலையை சேர்ந்தவர் கதிரவன் (வயது 30). இவர் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா (25). இவர்களுக்கு 13 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

கதிரவனும், அனிதாவும் நேற்று காலை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். கடற்கரை சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் அவர்கள் இருவரும் நடந்து சென்றனர்.

தாக்கி நகை பறிப்பு

அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கேட்டனர். நகைகளை தரமறுத்து கதிரவன் அவர்களுடன் போராடினார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவரை இரும்பு கம்பியால் தாக்கி தம்பதியிடம் இருந்த 12 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் கதிரவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலை தடுக்க முயன்ற அனிதாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மர்மநபர்களையும் தேடி வருகின்றனர்.

Next Story