பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு


பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 14 Oct 2018 9:45 PM GMT (Updated: 14 Oct 2018 7:52 PM GMT)

பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவரே, அவரை கொலை செய்து விட்டு நாடகமாடியது அம்பலமானது. நெய்வேலி அருகே நடந்த இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நெய்வேலி, 


நெய்வேலி அருகே உள்ள மேல்வடக்குத்து காலனியை சேர்ந்தவர் வேலு (வயது 37). தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி(30). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் விஜயலட்சுமி கடந்த 11-ந்தேதி இரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விரைந்து சென்று, விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தாய் லதா, நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயலட்சுமி தற்கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் விஜயலட்சுமி தற்கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இது தொடர்பாக அவரது கணவர் வேலுவிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இருப்பினும் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வேலு நேற்று வடக்குத்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகத்திடம், தன்னுடைய மனைவி விஜயலட்சுமியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.

தொடர்ந்து அவர் தனது வாக்குமூலத்தில், சம்பவத்தன்று குழம்பு சரியில்லை என்று மனைவியை அடித்தேன். இதில் வீட்டு சுவரில் மோதி அவர் கீழே விழுந்தார். இதையடுத்து நான் வெளியில் சென்று விட்டேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவர் அதே இடத்திலேயே இறந்து கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான், விஜயலட்சுமியை தூக்கில் தொங்க விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினேன். இருப்பினும் என்னிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதால், எப்படியும் நான் சிக்கிக்கொள்வேன் என்று நினைத்தேன். அப்படி சிக்கினால் என்னை போலீசார் அடிப்பார்கள் என்று பயந்து சரண் அடைந்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து சரண் அடைந்த வேலுவை கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் விஜயலட்சுமி தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரராஜ் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்தார். மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story