அர்ஜூனாபுரம் புதூர் கிராமத்தில் : 62 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்


அர்ஜூனாபுரம் புதூர் கிராமத்தில் : 62 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 14 Oct 2018 10:00 PM GMT (Updated: 14 Oct 2018 9:34 PM GMT)

அர்ஜூனாபுரம் புதூர் கிராமத்தில் 62 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் ஊராட்சியை சேர்ந்த அர்ஜூனாபுரம் புதூர் கிராமத்தில் வசிக்கும் 62 குடும்பத்தினர் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி பட்டா வழங்க போளூர் தாசில்தார் தியாகராஜன் மற்றும் வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று அர்ஜூனாபுரம் புதூர் கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செஞ்சி ஏழுமலை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தூசிமோகன், பன்னீர்செல்வம், ஆரணி உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போளூர் தாசில்தார் தியாகராஜன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு, 62 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினார்.

அதைத் தொடர்ந்து அழகுசேனை கிராமத்தில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். பின்னர் 7 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

விழாவில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் (பயிற்சி) பிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நளினிமனோகரன், ஜெயசுதா, போளூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மணி, குப்பம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மனோகரன், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள் படவேடு அன்பழகன், அனந்தபுரம் சேகர், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜாபாபு, திருமால், சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் அருள்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அழகுசேனை மார்கு, கொளத்தூர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story