பெரம்பலூரில் மண்டல அளவிலான குழுப்போட்டிகள் முதல் இடத்தை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்


பெரம்பலூரில் மண்டல அளவிலான குழுப்போட்டிகள் முதல் இடத்தை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்
x
தினத்தந்தி 15 Oct 2018 10:30 PM GMT (Updated: 15 Oct 2018 7:59 PM GMT)

பெரம்பலூரில் நடந்த மண்டல அளவிலான பள்ளி மாணவிகளுக்கான குழுப்போட்டிகளில் முதல் இடத்தை பிடித்த அணிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்,

பள்ளி கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் பெரம்பலூர் மண்டல அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் கொண்ட அணிகளுக்கான குழு போட்டிகள் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளில் மாவட்ட அளவிலான குழு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த பெரம்பலூர், அரியலூர், உடையார்பாளையம், கரூர் ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளின் அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். குழு போட்டிகளான கால்பந்து, கோ-கோ, இறகு பந்தாட்டம் ஆகிய போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

கூடைப்பந்து, டென்னிஸ், மேஜை பந்தாட்டம் ஆகிய போட்டிகள் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கைப்பந்து, பூப்பந்தாட்டம், கபடி ஆகிய போட்டிகள் பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் நடந்தது. ஹேண்ட் பால், வளையப்பந்து லெப்பைக்குடிக்காடு விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளின் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மண்டல அளவிலான குழுப்போட்டிகளில் முதல் இடம் பிடித்த அணிகள் மாநில அளவில் நடைபெறும் குழுப்போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் அணிகளுக்கான மண்டல அளவில் கோ-கோ போட்டி மட்டும் நடந்தது. நாளை (புதன்கிழமை) மண்டல அளவில் மாணவர் களுக்கான மற்ற குழுப்போட்டிகள் பெரம்பலூரில் நடைபெறவுள்ளது.

Next Story