முசிறியில் கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டம்


முசிறியில் கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2018 11:00 PM GMT (Updated: 16 Oct 2018 8:02 PM GMT)

முசிறியில், அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முசிறி,

முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி உள்ளது. கல்லூரியை சேர்ந்த மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக விடுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

இது குறித்து மாணவிகள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து மாணவிகள் நேற்று விடுதி முன்பாக காலிக்குடங்களுடன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதிக்கு தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாணவிகள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் ராஜ்குமார், முசிறி தாசில்தார் சுப்ரமணியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, விடுதிக்கு தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story