பண்ருட்டி அருகே: தூக்குப்போட்டு இளம்பெண் சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது


பண்ருட்டி அருகே: தூக்குப்போட்டு இளம்பெண் சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2018 9:30 PM GMT (Updated: 17 Oct 2018 6:12 PM GMT)

பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் இறந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி இந்திராணி(வயது 25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராஜா, குஜராத்தில் உள்ள ஒரு செராமிக் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர், கீழிருப்புக்கு வந்தார். பின்னர் அவர் தினமும் மது குடித்து விட்டு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜா, இந்திராணியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர், நடத்தையில் சந்தேகப்பட்டு இந்திராணியை திட்டினார். மேலும், தான் சம்பாதித்து வீட்டுக்கு அனுப்பிய பணத்தை என்ன செய்தாய்?, எவ்வாறெல்லாம் செலவு செய்தாய்? அது பற்றி விவரமாக கூறுமாறு கேட்டுள்ளார். அதனை கூறமறுத்த இந்திராணியை அவர் தாக்கினார். பின்னர் ராஜா வெளியே சென்று விட்டார்.

இதில் மனமுடைந்த இந்திராணி, வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் பிணமாக தொங்கியதை கண்ட ராஜா அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது பற்றி தகவல் அறிந்ததும் இந்திராணியின் பெற்றோர் நேரில் வந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று, இந்திராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இந்திராணியின் தாய் லட்சுமி போலீசில் கொடுத்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராணியை தற்கொலைக்கு தூண்டிய தாக ராஜாவை கைது செய்தனர்.

Next Story