ஸ்கூட்டர்- லாரி மோதல்; பெண் சாவு கணவர் இறந்த ஒரு ஆண்டில் மனைவியும் பலியான சோகம்


ஸ்கூட்டர்- லாரி மோதல்; பெண் சாவு கணவர் இறந்த ஒரு ஆண்டில் மனைவியும் பலியான சோகம்
x
தினத்தந்தி 17 Oct 2018 10:30 PM GMT (Updated: 17 Oct 2018 7:19 PM GMT)

மன்னார்குடி அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் இறந்தார். கணவர் இறந்த ஒரு ஆண்டில் மனைவியும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பாமணி தேவேந்திரபுரத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 35). சித்தேரியை சேர்ந்தவர் மாலதி (33). இவர் ஜோதியின் தோழி. நேற்று காலை தேவேந்திரபுரத்தில் உள்ள ஜோதியின் வீட்டுக்கு மாலதி சென்றார்.

பின்னர் மாலதியை தனது ஸ்கூட்டரில் ஜோதி ஏற்றிக்கொண்டு சித்தேரிக்கு சென்று கொண்டிருந்தார். கர்த்தநாதபுரம் பாலம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிய மாலதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த மன்னார்குடி போலீசார், மாலதியின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாலதியின் கணவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது 2 குழந்தைகளுடன் சித்தேரியில் உள்ள தனது தாயார் வீட்டில் மாலதி வசித்து வந்தார். கணவர் இறந்த ஒரு ஆண்டில் மனைவியும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சித்தேரி பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story