2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: பாலியல் குற்றச்சாட்டில் மணமகன்கள் மீது வழக்குப்பதிவு


2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: பாலியல் குற்றச்சாட்டில் மணமகன்கள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Oct 2018 11:12 PM GMT (Updated: 17 Oct 2018 11:12 PM GMT)

திருவண்ணாமலை அருகே 2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த சிறுமிகளை மணக்க இருந்த 2 மணமகன்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை,

கீழ்பென்னாத்தூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த திருமண வயதை எட்டாத சிறுமிக்கும், திருவண்ணாமலையை அடுத்த ஊசாம்பாடியை சேர்ந்த சங்கர்-கங்கா தம்பதியின் மகன் அறிவழகன் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. திருமண ஏற்பாடுகளில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக மாவட்ட சமூக நலத்துறைக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து திருமணம் நடக்க இருந்த இடத்துக்கு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியபோது திருமணம் செய்து கொள்ள இருந்த பெண் 18 வயதை எட்டவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இந்த நிலையில் திருமண ஏற்பாடு நடந்த இடைப்பட்ட காலத்தில் அறிவழகன், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருவண்ணாமலை அனைத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அறிவழகன் மற்றும் அவரது பெற்றோர், அந்த சிறுமியின் தாயார் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமிக்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவருக் கும் இடையே திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர். திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில் அந்த சிறுமிக்கு திருமண வயது எட்டவில்லை என்று மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் திருமணம் நடைபெறும் என்று நம்பி சில நாட்களுக்கு முன்னதாகவே சிறுமியை குருமூர்த்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குருமூர்த்தி, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story