போரூர் அருகே புதரில் பெண் குழந்தையை வீசிய தாய் சிக்கினார்


போரூர் அருகே புதரில் பெண் குழந்தையை வீசிய தாய் சிக்கினார்
x
தினத்தந்தி 19 Oct 2018 11:00 PM GMT (Updated: 19 Oct 2018 9:52 PM GMT)

போரூர் அருகே புதரில் வீசப்பட்டு கிடந்த பச்சிளம் பெண் குழந்தையின் தாய் போலீசாரிடம் சிக்கினார்.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம், ஆற்காடு சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மின்சார சுடுகாடு உள்ளது. அதன் அருகே உள்ள மரப்பலகை கடையின் அருகில் உள்ள புதரில் கடந்த 10–ந் தேதி இரவு பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று, தொப்புள் கொடியுடன் ஒரு லுங்கியில் சுற்றி வீசப்பட்டு இருந்தது.

வளசரவாக்கம் போலீசார், அந்த குழந்தையை மீட்டு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு குழந்தையை பராமரித்து வருகின்றனர்.

அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வுசெய்தபோது, ஒரு வாலிபருடன் சுடிதார் அணிந்து வந்த பெண் ஒருவர், அந்த குழந்தையை புதரில் வீசிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அந்த குழந்தையின் தாய், திண்டுக்கல்லை சேர்ந்த 22 வயது இளம்பெண் என்பதும், போரூரில் உள்ள வீட்டில் தனியாக தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரிந்தது.

அந்த பெண்ணை பிடித்து, எதற்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசி சென்றார்? என போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அந்த இளம்பெண் கூறியதாவது:–

திண்டுக்கல்லை சேர்ந்த நான், போரூரில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணம் செய்யமுடிவு செய்து, ஒரு வாலிபருடன் நிச்சயதார்த்தமும் முடிந்து, இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டோம். இதற்கடையில் எனது தாய் இறந்துவிட்டார். இதனால் எனது திருமண பேச்சு அப்படியே நின்றுவிட்டது.

அதன்பிறகு எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட அந்த வாலிபர், அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்து வந்தார். இதில் நான் கர்ப்பமானேன். ஆனால் 6 மாதங்களுக்கு பிறகுதான் எனக்கு அது தெரியவந்தது. ஆனால் என்னை கர்ப்பமாக்கிய பிறகு அந்த வாலிபர், என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் வீட்டின் கழிவறையிலேயே நான் குழந்தையை பெற்றுக்கொண்டேன். குழந்தை பிறந்த பிறகு 3 நாட்களுக்கு மேல் என்னால் குழந்தையை பார்த்துக்கொள்ள முடியவில்லை. குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது.

இதனால் குழந்தையின் சத்தம் கேட்டு யாராவது கண்டுபிடித்து விடுவார்கள் என்று பயந்து, அந்த குழந்தையை எங்காவது கொண்டுபோய் போட்டு விடலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று இரவு லுங்கியால் அந்த குழந்தையை சுற்றி, பையில் எடுத்துக்கொண்டேன். துணைக்கு அருகில் இருந்த வாலிபரை கோவிலுக்கு போகலாம் என்று அழைத்துச்சென்றேன். காரம்பாக்கம் அருகே அந்த புதரில் குழந்தையை வீசிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பெண்ணை, சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story