பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2018 10:30 PM GMT (Updated: 19 Oct 2018 9:52 PM GMT)

பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

செங்குன்றம்,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் 29–ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று காலை முதல் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 595 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 29–ந் தேதி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 12.25 அடியாக பதிவாகி வெறும் 13 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் இருந்தது.

தற்போது கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 24.08 அடியாக பதிவானது. 720 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக கடந்த 6–ந் தேதி இணைப்பு கால்வாயில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை முதல் நீர் திறப்பு வினாடிக்கு 400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.


Next Story