பணிச்சுமையால் ஆத்திரம்: தண்டவாளத்தை சேதப்படுத்திய ரெயில்வே ஊழியர்கள் 3 பேர் கைது


பணிச்சுமையால் ஆத்திரம்: தண்டவாளத்தை சேதப்படுத்திய ரெயில்வே ஊழியர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2018 9:30 PM GMT (Updated: 21 Oct 2018 6:16 PM GMT)

பணிச்சுமை காரணமாக தண்டவாளத்தை சேதப்படுத்திய ரெயில்வே ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து கடந்த 19-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பயணிகள் ரெயில் சேலத்துக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. அந்த ரெயில் மதியம் 2.20 மணியளவில் கூத்தக்குடி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தது.

அப்போது தண்டவாளத்தில் நீண்ட வரிசையில் இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் நாசவேலை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தண்டவாளத்தை அடியில் உள்ள சிமெண்டு கட்டையுடன் இணைக்கும் 15-க்கும் மேற்பட்ட இரும்பு ‘கிளிப்’புகளை யாரோ உடைத்து தண்டவாளத்தின் மீது வைத்திருந்தனர்.

இது பற்றி அவர் கூத்தக்குடி ரெயில் நிலையத்துக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைத்தனர். அதன்பிறகு மாலை 4.20 மணி அளவில் பயணிகள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சேலத்தை நோக்கி சென்றது.

இந்த சம்பவம் குறித்து சேலம் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் ரெயிலை கவிழ்ப்பதற்காக நாசவேலையில் ஈடுபட்டார்களா? அல்லது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என விசாரணை நடத்தினார்கள்.

மேலும் சந்தேகத்தின் பேரில் கூத்தக்குடி ரெயில் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மகேந்திரன் (வயது 36), மணிவேல் (32) ரகுராமன் (40) ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் எங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. எனவே ஆட்கள் பற்றாக்குறை இருப்பதை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக ஆத்திரத்தில் இந்த செயலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே தண்டவாளத்தை சேதப்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story