செல்போனை பறித்து வாலிபர்கள் மீது தாக்குதல் சூளையில் 2 பேர் கைது


செல்போனை பறித்து வாலிபர்கள் மீது தாக்குதல் சூளையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 22 Oct 2018 7:04 PM GMT)

சென்னை சூளையில் செல்போனை பறித்து வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை சூளை சாமிபிள்ளை தெருவை சேர்ந்தவர் ராஜீவ்(வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், தங்களுடைய செல்போன் தொலைந்துவிட்டதாகவும், அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கூறி ராஜீவின் செல்போனை கேட்டனர். ஆனால் ராஜீவ் தனது செல்போனை தர மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த 2 பேரும் ராஜீவ் பாக்கெட்டில் இருந்து அவருடைய செல்போனை வலுக்கட்டாயமாக எடுத்தனர்.

இதனால் ராஜீவ் சத்தம் போட்டார். வீட்டில் இருந்து அவரது நண்பர் பப்லு என்பவரும் வெளியே வந்து தட்டிக்கேட்டார். இந்தநிலையில் அந்த 2 பேரும் ராஜீவையும், பப்லுவையும் தாக்கினர். காயமடைந்த 2 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து ராஜீவின் சகோதரர் பினய்குமார்(27) பெரியமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ராஜீவ், பப்லுவை தாக்கியதாக சூளை பகுதியை சேர்ந்த தமிழ்வாணன்(27), சிரஞ்சீவி(21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story