இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைப்பு


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 23 Oct 2018 11:15 PM GMT (Updated: 23 Oct 2018 7:05 PM GMT)

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோட்டைப்பட்டினம்,

இலங்கையின் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரக கப்பலில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 5 பேரை சிறைபிடித்து இலங்கையின் காரைத்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலோர காவல் படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதிகாரிகள் விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வம்(வயது 48) என்பவருக்கு சொந்தமான விசைபடகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சின்னையா(50), சுப்பிரமணி(45), மாரிமுத்து(38), பழனி(30) ஆகிய 5 பேரும் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றது தெரியவந்தது. மேலும் பிடிபட்ட 5 மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அவர்கள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள், குடும்பத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கூறுகையில், “ இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக 5 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர்.

Next Story