மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தேசிய அடையாள அட்டைக்கான முகாம்கள் சென்னையில் நடக்கிறது


மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தேசிய அடையாள அட்டைக்கான முகாம்கள் சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 23 Oct 2018 11:00 PM GMT (Updated: 23 Oct 2018 11:00 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னை,

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 1 முதல் 18 வயது வரையுள்ள செவித்திறன் குறைபாடு, பார்வைத்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் முடநீக்கு வல்லுனர், காது-மூக்கு-தொண்டை, மனநலம், கண் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் பரிசோதனை செய்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்வார்கள்.

மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் 4 புகைப்படம், வருவாய் சான்றிதழ், ஆதார் அட்டை, மருத்துவச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களோடு முகாமுக்கு வர வேண்டும். காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும். இடங்கள் விவரம் வருமாறு:-

24-ந் தேதி(இன்று) தியாகராயநகர் பனகல் பார்க் அருகில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி, சூளை வி.கே.பிள்ளை தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி, 25-ந் தேதி (நாளை) பெரம்பூர் திரு.வி.க.நகரில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி, திருவல்லிக்கேணியில் உள்ள சென்னை சமுதாய கல்லூரி, 26-ந் தேதி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள சென்னை நடுநிலைப்பள்ளி, சேத்துப்பட்டு மெக்நிக்கோலஸ் சாலையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி.

மேற்கண்ட தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story