பவுர்ணமியையொட்டி கோவில்களில் அன்னாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


பவுர்ணமியையொட்டி கோவில்களில் அன்னாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 24 Oct 2018 10:30 PM GMT (Updated: 24 Oct 2018 8:57 PM GMT)

பவுர்ணமியையொட்டி கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பவுர்ணமியையொட்டி சுவாமிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பல விதமான காய்கறிகள், பழங்கள் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவரங்குளத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மகாதீபம் நடைபெற்றது. பின்னர் திருக்குளத்தில் உள்ள மீன்களுக்கு அன்னங்கள் உணவாக வழங்கப்பட்டது.திருவரங்குளம் அருகே பொற்பனைக்கோட்டையில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதேபோல இம்மனாம்பட்டி முத்துமாரியம்மன் கோவில், பாரதியார் நகர் புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவில், திருவரங்குளம் பிடாரி அம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமயம் ஊமையன்கோட்டையில் பிரசித்தி பெற்ற சிவன்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பவுர்ணமியையொட்டி சிவனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி திரளான பக்தர்கள் பெரியகடைவீதி, ஊத்திக்கண் வீதி வழியாக ஊர்வலமாக வந்து ஊமையன்கோட்டையை சுற்றி கிரிவலம் வந்தனர். பின்னர் சிவன்கோவில் மற்றும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கந்தர்வகோட்டையில் உள்ள அமராவதி உடன்உறை ஆபத்துசகாஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பால், இளநீர், திரவிய, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு அன்னாத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

இதேபோல ஆலங்குடி நாமபுரீஸ்வரர் சிவன் கோவிலில் சுவாமிக்கு அன்ன அபிஷேக வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story