புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மினிலாரியில் கடத்திய 2,400 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது; 3 பேர் தப்பி ஓட்டம்


புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மினிலாரியில் கடத்திய 2,400 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது; 3 பேர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2018 10:00 PM GMT (Updated: 25 Oct 2018 7:14 PM GMT)

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மினிலாரியில் கடத்திய 2,400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவின் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார், பாக்கம் கூட்டுசாலை பஸ் நிறுத்தம் அருகில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த மினி லாரியை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். போலீசாரை பார்த்ததும் மினி லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதில் வந்த 4 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் டிரைவர் மட்டும் போலீசிடம் பிடிபட்டார். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர

இதையடுத்து அந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்ததில் 50 அட்டைப்பெட்டிகளில் 2,400 மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் அருகே சின்னக்குப்பத்தை சேர்ந்த ஏகாம்பரம் மகன் புகழேந்தி (வயது 32) என்பதும், தப்பி ஓடிய 3 பேரும் அதே கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன், வேல்முருகன், அஜித் ஆகியோர் என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து புகழேந்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி ஆகியோர் பார்வையிட்டனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story