வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல்கால் நடப்பட்டது


வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல்கால் நடப்பட்டது
x
தினத்தந்தி 25 Oct 2018 10:30 PM GMT (Updated: 25 Oct 2018 7:57 PM GMT)

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல்கால் நடப்பட்டது.

ஸ்ரீரங்கம்,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 7-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. 17-ந் தேதி மோகினி அலங்காரமும், 18-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பும் நடைபெறுகிறது.

24-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 25-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 27-ந் தேதி தீர்த்தவாரியும், 28-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.


இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தியது. தொடர்ந்து முகூர்த்த பந்தல்காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தல்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.

இதனைத்தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல்கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story