கொண்டலாம்பட்டி அருகே முன்விரோதத்தில் சுத்தியலால் தாக்கப்பட்ட பெண் சாவு; தொழிலாளி கைது - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


கொண்டலாம்பட்டி அருகே முன்விரோதத்தில் சுத்தியலால் தாக்கப்பட்ட பெண் சாவு; தொழிலாளி கைது - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Oct 2018 10:00 PM GMT (Updated: 25 Oct 2018 11:17 PM GMT)

கொண்டலாம்பட்டி அருகே முன் விரோதத்தில் சுத்தியலால் தாக்கப்பட்ட பெண் பலியானார். இதையொட்டி கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கொண்டலாம்பட்டி, 

சேலம் வேம்படிதாளம் அருகே உள்ள திருவள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (30). இதே பகுதியை சேர்ந்தவர் சித்தம்மாள். இவர் முருகேசனுக்கு சித்தி ஆவார். இந்த நிலையில் கவிதாவும், சித்தம்மாளின் பேரன் உறவு முறையான வாலிபர் ஒருவரும் அடிக்கடி பேசி வந்து உள்ளனர்.

இதில் சந்தேகம் அடைந்த சித்தம்மாள், கவிதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். இதில் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன், வீட்டில் இருந்த சுத்தியலால், சித்தம்மாள் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி சித்தம்மாள் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று கொலை வழக்காக மாற்றி முருகேசனை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story