கார் மோதி கிராம நிர்வாக அதிகாரிகள் படுகாயம்


கார் மோதி கிராம நிர்வாக அதிகாரிகள் படுகாயம்
x
தினத்தந்தி 29 Oct 2018 10:15 PM GMT (Updated: 29 Oct 2018 10:20 PM GMT)

கார் மோதி கிராம நிர்வாக அதிகாரிகள் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி படுகாயமடைந்தனர்.

கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 54). இவர் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் மஞ்சமேடு கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (34) பழங்காநத்தம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் அரியலூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டத்திற்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கீழப்பழுவூர் புதிய பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக தஞ்சை மாவட்டம், ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த தனபால் மகன் வினோத் (22) என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அறிவழகன், கார்த்திகேயன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story