வள்ளியூர், இடிந்தகரையில் பரிதாபம்: மர்ம காய்ச்சலுக்கு குழந்தை-பெண் பலி


வள்ளியூர், இடிந்தகரையில் பரிதாபம்: மர்ம காய்ச்சலுக்கு குழந்தை-பெண் பலி
x
தினத்தந்தி 29 Oct 2018 10:49 PM GMT (Updated: 29 Oct 2018 10:49 PM GMT)

வள்ளியூர் மற்றும் இடிந்தகரையில் மர்ம காய்ச்சலுக்கு 1½ வயது குழந்தையும், ஒரு பெண்ணும் பரிதாபமாக இறந்தனர்.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முருகையா (வயது 37), லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜெயராணி (35). இவர்களுக்கு பவித்ரா (1½ வயது) உள்பட 4 பெண் குழந்தைகள். ஜெயராணி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் பவித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். இதனால் சிகிச்சைக்காக ஏர்வாடி, வெள்ளமடம் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். ஆனாலும் பவித்ராவுக்கு காய்ச்சல் குறையவில்லை.

பின்னர் குழந்தையை நேற்று முன்தினம் வீட்டுக்கு கொண்டு வந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பவித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர், குழந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பின்னர் முருகையா தனது சொந்த ஊரான தளபதிசமுத்திரத்தை அடுத்துள்ள கருங்கண்ணன்குடியிருப்புக்கு மகள் பவித்ராவின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தார்.

கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த சந்தியாகு என்பவருடைய மனைவி ஜெனதா (47). இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் ஜெனதா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஜெனதாவின் உடல், இடிந்தகரைக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மர்ம காய்ச்சலுக்கு 1½ வயது குழந்தை உள்பட 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story