வேலூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 350 பேர் கைது


வேலூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 350 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2018 11:35 PM GMT (Updated: 29 Oct 2018 11:36 PM GMT)

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 350 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வேலூர் மாவட்ட கிளை சார்பில் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், உணவு உண்ணும் மாணவர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு உணவு மானியத்தை 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 2-ம் கட்ட போராட்டமாக 26,27 ஆகிய தேதிகளில் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட போவதாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை 9 மணி முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே வரத்தொடங்கினர்.

சாலை மறியலில் ஈடுபடும் சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் சாலையில் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைத்தனர்.

மேலும் அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீதர் (வேலூர்), லோகநாதன் (காட்பாடி) ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி (சத்துவாச்சாரி), நாகராஜன் (வேலூர் வடக்கு) ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

11.30 மணியளவில் சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆண்டாள் தலைமையில் மாவட்ட தலைவர் செல்வம், துணைத்தலைவர் சந்திரமோகன், ஜெகதீசன், ரவி, பரமசிவம் ஆகியோர் முன்னிலையில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அனைவரும் ஊர்வலமாக சென்று சத்துவாச்சாரியில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் அணுகுசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகேயுள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். மறியலில் ஈடுபட்ட 320 பெண்கள் உள்பட 350 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்க வேலூர் மாவட்ட தலைவர் செல்வம் கூறுகையில், எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மையங்களுக்கு இன்று (நேற்று) பூட்டு போட்டு விட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். கோரிக்கைகள் நிறைவேறும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

சத்துணவு திட்ட அதிகாரிகள் கூறுகையில், சத்துணவு ஊழியர்களின் போராட்டம் காரணமாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் மூலம் வேறு ஆட்களை வைத்து சமையல் செய்து குழந்தைகளுக்கு வழக்கம்போல் சத்துணவு வழங்கப்பட்டது என்றனர்.


Next Story