பெரம்பலூர், அரியலூரில் சாலை மறியல்: சத்துணவு ஊழியர்கள் 494 பேர் கைது


பெரம்பலூர், அரியலூரில் சாலை மறியல்: சத்துணவு ஊழியர்கள் 494 பேர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 10:30 PM GMT (Updated: 30 Oct 2018 6:54 PM GMT)

பெரம்பலூர், அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 494 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்,

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், சட்ட ரீதியான ஓய்வூதியமும் அரசு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை அமைப்பாளர் களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவூட்டும் செலவினம் ரூ.5 தர வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடந்த 25-ந்தேதி முதல் மாநில தழுவிய மாவட்ட தலைநகரங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்களத்திலேயே தக்காளி, எழுமிச்சை ஆகிய சாதங்களை தயார் செய்து சாப்பிட்டனர். ஆனால் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினமும் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மாவட்ட தலைவர் பொன் ஆனந்தராஜ் தலைமையில் 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 464 சத்துணவு ஊழியர்களை கைது செய்து, அங்கு உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.

இதேபோல் அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 30 பேரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து, அங்கு உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.

Next Story