கோடியக்கரையில் 2-வது நாளாக கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


கோடியக்கரையில் 2-வது நாளாக கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 30 Oct 2018 9:45 PM GMT (Updated: 30 Oct 2018 7:16 PM GMT)

கோடியக்கரையில் 2-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம், 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, தலைஞாயிறு, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, விழுந்தமாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது. இதனால் கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வருவாய்த்துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். கோடியக்கரையில் நேற்று 2-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

கடல் சீற்றம் காரணமாக கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் மீனவர்களின் படகுகள் ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story