ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல்- கை கழுவுதல் விழிப்புணர்வு


ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல்- கை கழுவுதல் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 30 Oct 2018 11:39 PM GMT (Updated: 30 Oct 2018 11:39 PM GMT)

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் மற்றும் கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சலுக்காக 75-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில், ரெயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கு பன்றிக் காய்ச்சல் மற்றும் கையை சுத்தமாக கழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாநகராட்சி சார்பில் நேற்று நடைபெற்றது.

ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் நடந்த நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உதய குமார் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வுக்காக மாநகராட்சி, ரெயில்வே அலுவலர்கள் மற்றும் குழந்தை ஏசு நர்சிங் பள்ளி மாணவிகள், அன்பு பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள், சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு ரெயிலில் வந்த பயணிகளுக்கு கைகளை அடிக்கடி கழுவுவதால் ஏற்படும் நன்மை குறித்தும், கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சோப் அல்லது வேதிப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கொண்டு 15 முதல் 20 நொடிகள் கைகளை கழுவினால் கிருமிகளை கொன்று விடும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் ரெயில் பயணிகளுக்கு அங்கேயே கை கழுவ சோப் மற்றும் ‘லிக்யூட்’(சோப் ஆயில்) வழங்கப்பட்டு கையை சுத்தமாக கழுவ செய்தனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் டாக்டர் ராஜேஸ்வரி, உதவி ஆணையர் தயாநிதி மற்றும் ரெயில்வே சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story