செங்கல் சூளை நடத்த அனுமதி பெற விண்ணப்பம் கலெக்டர் தகவல்


செங்கல் சூளை நடத்த அனுமதி பெற விண்ணப்பம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2018 9:30 PM GMT (Updated: 31 Oct 2018 5:51 PM GMT)

செங்கல் சூளை நடத்த அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி,

தேனி மாவட்டத்தில் செயல்படும் செங்கல் தயாரிப்பவர்கள், சேம்பர் செங்கல் தயாரிப்பு உரிமையாளர்கள் தங்களது செங்கல் சூளைகளை 1959-ம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்படி பதிவு செய்திருக்க வேண்டும். சூளைகளுக்கு தேவையான மண்ணையும் உரிய அனுமதி பெற்று தான் எடுக்க வேண்டும்.

சூளைகளை பதிவு செய்ய அவை அமைந்துள்ள இடத்துக்கான கிராம ஆவணங்களான சிட்டா, அடங்கல், ‘அ’ பதிவேடு மற்றும் இடத்துக்கான வரைபட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் 3 ஆண்டுகளுக்கான பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

மண் எடுக்கும் அனுமதி பெறுவதற்கு மண் எடுக்க உத்தேசித்துள்ள இடத்துக்கான சிட்டா, அடங்கல் ‘அ’பதிவேடு மற்றும் இடத்துக்கான வரைபட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவற்றுக்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

செங்கல் சூளை மற்றும் சேம்பர்களுக்கு தேவையான மண்ணை மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று செயல்படும் குவாரிகளில் இருந்து விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் உரிமையாளர்கள் அவ்வாறு விலை கொடுத்து பெறும் மண்ணுக்கு உரிய நடைச்சீட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், இவை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story