திருப்பூர் மாவட்டத்தில் எந்திர மையங்கள் அமைக்க விவசாயிகள் மானியம் பெறலாம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்


திருப்பூர் மாவட்டத்தில் எந்திர மையங்கள் அமைக்க விவசாயிகள் மானியம் பெறலாம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2018 11:00 PM GMT (Updated: 31 Oct 2018 10:58 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் எந்திர மையங்கள் அமைக்க விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியினை பெருக்கும் வகையில் நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2016-2017-ம் ஆண்டு முதல் 2019-2020-ம் ஆண்டு வரையில் 1000 ஏக்கர் கொண்ட மானாவாரி நிலத்தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு மேம்பாட்டு பணிகள் ரூ.802.90 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2017-2018-ம் நிதியாண்டில் விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி, அதிக லாபம் பெறும் வகையில் மதிப்பு கூட்டும் எந்திர மையங்கள் 75 சதவீத மானியத்தில் அமைத்திட்ட முதற்கட்டமாக 25 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 தொகுப்புகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மானாவாரி தொகுப்புகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அந்தந்த தொகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை மதிப்பு கூட்டுவதற்காக, மதிப்பு கூட்டும் எந்திர மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

விளைபொருட்கள் சுத்தப் படுத்துதல், தரம் பிரித்தல் விற்பனைக்கேற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான மதிப்பு கூட்டும் எந்திரங்கள் கொள்முதல் மற்றும் பணி மூலதனத்திற்கான மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அந்த தொகையை அரசு மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீத தொகை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தி குழுவின் பங்களிப்பாக செலுத்தப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்பில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழு சேர்ந்து பெரிய அளவிலான மதிப்பு கூட்டு எந்திர மையங்கள் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையிலும் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மதிப்பு கூட்டு எந்திரங்களை வேளாண் பொறியியல் துறையின் மூலம் விலை நிர்ணயம் செய்து அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் மதிப்பு கூட்டு எந்திர மையம் அமைக்கப்பட்டு, பலவகை எண்ணெய் பிழிந்தெடுக்கும் கருவிகள் (மரச்செக்குகள்) உள்ளிட்ட பல்வேறு எந்திரங்கள் வாங்கப்பட்டு லாபகரமான முறையில் இயங்கி வருவதால், விவசாயிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

பொதுமக்கள் தங்கள் தேவைக்கு இந்த மையங்களை அணுகி மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இதே போன்று நடப்பு நிதியாண்டில் 2-வது கட்டமாக 150 மதிப்பு கூட்டு எந்திர மையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 4 மதிப்பு கூட்டு எந்திர மையங்களுக்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. மதிப்பு கூட்டும் எந்திர மையம் அமைக்க ஆர்வம் உள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டு குழுவிடம் வழங்க வேண்டும். தொகுப்பு மேம்பாட்டு குழு விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்யும்.

பின்னர் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கும் கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதல் பெறப்படும். பின்னர் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவி செயற்பொறியாளரால் மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்கிட பணி ஆணை வழங்கப்படும். எந்திரங்கள் வழங்கப்பட்டு மதிப்பு கூட்டும் எந்திர மையம் நிறுவப்பட்ட பின் உதவி செயற்பொறியாளரால் ஆய்வு செய்யப்பட்டு, எந்திரங்கள் திருப்திகரமாக செயல்படுகிறது என்ற அறிக்கையினை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுவிடம் இருந்து பெற்ற பின்னரே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொகுப்பு மேம்பாட்டு குழுவின் மூலம் மானிய தொகை விடுவிக்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்கள் விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட தொகுப்பு மேம்பாட்டு குழுவிற்கு அளித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story