குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 Nov 2018 10:30 PM GMT (Updated: 1 Nov 2018 7:06 PM GMT)

குடிநீர் கேட்டு தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தோகைமலை, 

நாகனூர் ஊராட்சியில் உள்ள மணச்சணம்பட்டி நாயக்கர் தெருவில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும் நாயகர் தெரு பகுதியில் அடிபம்பும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் இருந்த மின்மோட்டார் பழுதடைந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்வதற்காக கழற்றி சென்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அடிபம்பை பயன்படுத்தி வந்தனர். தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் அந்த அடிபம்பில் சரியாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மணச்சணம்பட்டி நாயக்கர் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தோகைமலை ஒன்றிய அலுவலகம் மற்றும் நாகனூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம வளர்ச்சி) ராணி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 2 நாட்களில் மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story