கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 2 Nov 2018 10:00 PM GMT (Updated: 2 Nov 2018 5:34 PM GMT)

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் வாட்டி எடுத்த கோடை வெயில் காரணமாக 4 ஏரிகளின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

அதன்பேரில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 29-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. அக்டோபர் மாதம் 28-ந் தேதி தண்ணீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டது.

வினாடிக்கு 1,300 கனஅடியில் இருந்து 300 கனஅடியாக குறைக்கப்பட்டது. 31-ந் தேதி கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

செப்டம்பர் மாதம் 29-ந் தேதி முதல் கடந்த மாதம் 31-ந் தேதி வரை 1.604 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரியை வந்தடைந்தது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 1.256 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது. தற்போது 1.604 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 23.80 அடியாக பதிவானது. 682 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வீதம் இணைப்பு கால்வாயில் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீர் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது.

Next Story