தேவர் ஜெயந்தி விழாவில் அ.தி.மு.க. பேனர்கள் கிழிப்பு: டி.டி.வி.தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு- கைதான 53 பேர் சிறையில் அடைப்பு


தேவர் ஜெயந்தி விழாவில் அ.தி.மு.க. பேனர்கள் கிழிப்பு: டி.டி.வி.தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு- கைதான 53 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 2 Nov 2018 10:00 PM GMT (Updated: 2 Nov 2018 8:45 PM GMT)

கமுதியில் அ.தி.மு.க. பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க.வை சேர்ந்த 53 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அவர்களை வரவேற்று அ.தி.மு.க.வினர் கமுதி-அபிராமம் சாலை முதல் பசும்பொன் வரையிலும் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். இந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வந்தபோது அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கமுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

பேனர் கிழிப்பு சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் வி.கே.ஜி.முத்துராமலிங்கம், முத்து உள்பட 100 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த ராமையா, இடைச்சியூரணி மாரிமுத்து, குருவிகாத்தி சத்தியகாந்தி, திருவாடானை வடக்கூர் சக்தி நமச்சிவாயம், கலியநகரி பன்னீர்செல்வம் உள்பட 53 பேரை போலீசார் கைது செய்து கமுதி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர்கள் அனைவரும் நீதிபதி உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story