சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு படி 2 மணி நேரம் மட்டுமே அனுமதி: விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள்


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு படி 2 மணி நேரம் மட்டுமே அனுமதி: விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Nov 2018 10:30 PM GMT (Updated: 3 Nov 2018 5:32 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடித்து விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊட்டி, 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் தமிழக அரசு ஒரு எதிர்வாதியாக இணைத்து கொண்டது. இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும்.

வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் தீபாவளி பண்டிகை நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேரம் நிர்ணயம் செய்தது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பட்டாசு வெடிக்க கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி அளிக்க வேண்டும் என மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் கூடுதல் நேரம் வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி தமிழக அரசு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே மாசு இல்லாத சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசு வெடிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரி, வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்து, மாசு மற்றும் ஒலி இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story