தமிழகத்தில் விரைவில் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆட்சி அமையும் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேச்சு


தமிழகத்தில் விரைவில் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆட்சி அமையும் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேச்சு
x
தினத்தந்தி 3 Nov 2018 10:45 PM GMT (Updated: 3 Nov 2018 9:43 PM GMT)

தமிழகத்தில் விரைவில் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கடத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, பெரியசாமி, கவுதமன், பாஸ்கர், பார்த்திபன், அருள், பேரூராட்சி கழக செயலாளர்கள், டோமினிக், சேகர்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விரைவில் இந்த அரசை மக்கள் வீட்டு அனுப்ப போகிறார்கள். டி.டி.வி. தினகரன் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதற்கு உறுதுணை புரியும் வகையில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் இப்போதே ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க தயாராக வேண்டும். முனைப்புடன் செயல்படுவதன் மூலம் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளிலும் நமது வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற பேசினார்.

கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, மாநில வக்கீல் பிரிவு துணைச்செயலாளர் அசோக்குமார், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பாலு, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் எடப்பாடி ராஜேந்திரன் ஆகியோர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள்.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பூக்கடை முனுசாமி, மணிவண்ணன், பூங்காவனம், நீலாபுரம் செல்வம், சக்தி, தமிழ், இந்திராகாந்தி, சாந்தரூபினி உள்பட பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி செயலாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

Next Story