கோயம்பேடு பகுதியில் சங்கிலி பறிப்பு-திருட்டு; 2 வாலிபர்கள் கைது


கோயம்பேடு பகுதியில் சங்கிலி பறிப்பு-திருட்டு; 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 3 Nov 2018 10:31 PM GMT (Updated: 3 Nov 2018 10:31 PM GMT)

கோயம்பேடு பகுதியில் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு நெற்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர், சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 25) என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெற்குன்றத்தை சேர்ந்த ராஜூ என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியதும் தெரியவந்தது.

ராமச்சந்திரனை கைது செய்த கோயம்பேடு போலீசார், அவரிடம் இருந்து 6 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

அதேபோல் கோயம்பேட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம், அந்த மோட்டார்சைக்கிளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.

விசாரணையில் அவர், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன்(23) என்பதும், மதுரவாயல், கோயம்பேடு போன்ற பகுதிகளில் மோட்டார்சைக்கிளில் சென்று தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

வெங்கடேசனை கைது செய்த கோயம்பேடு போலீசார், அவரிடம் இருந்து 4 பவுன் நகைகள், ஒரு மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Next Story