டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்: தமிழக அரசின் சிறப்பு அலுவலர் ஆய்வு


டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்: தமிழக அரசின் சிறப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Nov 2018 10:15 PM GMT (Updated: 4 Nov 2018 6:46 PM GMT)

பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதிகளில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர் வெள்ளத்தடுப்பு மற்றும் டெங்கு நோய் தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பொன்னேரி,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்வதற்காக மண்டல வாரியாக சிறப்பு அலுவலர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறும் சுகாதார பணிகள் மற்றும் வெள்ள நீர் தடுப்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்துவதற்காக தமிழக மருத்துவ தேர்வாணைய தலைவரும் சிறப்பு அலுவலருமான ராஜாராம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

அவர் பழவேற்காடு, கள்ளுக்கடைமேடு, குளத்துமேடு, தங்கல்பெரும்புலம், சாத்தாங்குப்பம், ரகமத்நகர், பெரும்பேடுகுப்பம், ஆலாடு, அத்தமணஞ்சேரி, ரெட்டிபாளையம், தத்தைமஞ்சி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு வெள்ள நீர் பகுதிகள், ஆரணி ஆற்றில் தடுப்பணை, அணைக்கட்டு, கலங்கள், வரத்து கால்வாய்கள் போன்ற இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கிராம பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று சுகாதார பணிகளையும் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மருத்துவமனையை பார்வையிட்டபோது பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார்கள் கார்த்திகேயன், குமார், மண்டலதுணை தாசில்தார் செல்வகுமார், பொதுபணி துறைஉதவி செயற்பொறியாளர் முருகன், உதவிபொறியாளர்கள் ஜெயகுரு, கண்ணன், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மருத்துவ நலப்பணி துறையினர் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story