தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்களால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது


தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்களால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 4 Nov 2018 10:45 PM GMT (Updated: 4 Nov 2018 8:05 PM GMT)

தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்களால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

திருச்சி,

நாளை விடிந்தால் தீபாவளி. இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் முதன்மையான தீபாவளியை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி செவ்வாய்க்கிழமை வருகிறது. திங்கட்கிழமையான அரசு விடுமுறை நாளாக ஏற்கனவே அரசு அறிவித்துவிட்டது. இதனால் சென்னை போன்ற பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் நேற்று முன்தினமே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் இருந்து சென்னை, திருப்பூர், கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் நேற்று அதிக அளவில் இருந்தது. இதனால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் மன்னார்புரம், வில்லியம்ஸ் சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. திருச்சியில் இருந்து சென்னை சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையில் இருந்து வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று பயணிகள் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது. முன்பதிவில்லா பெட்டிகளில் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பயணிகள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு பயணம் செய்தனர். ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகளிலும் ரெயில்களில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் காத்து நின்றனர்.

திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதால் மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் மன்னார்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் மதுரை மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் அதிக அளவில் ஏறினார்கள். இதனால் மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பரபரப்புடன் காணப்பட்டது. இதே போல் வில்லியம்ஸ் சாலையில் இயங்கி வரும் பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Next Story