சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 4 Nov 2018 11:00 PM GMT (Updated: 4 Nov 2018 10:21 PM GMT)

சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நம்பியூர்,

நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நல்ல மழை பெய்து ஏரி, குளங்கள், அணை நிரம்பியுள்ளது. இது தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் வழங்குவது போன்ற சிறப்பான திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகிறது. தமிழகத்தில் தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது. ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கவும் கணினிகள் அமைக்கவும் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் டெண்டர்கள் முடிவடைந்து பணிகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் நிறைவடையும் போது இந்தியாவே திரும்பி பார்க்கிற ஒரு மாற்றத்தை தமிழகம் உருவாக்கும். ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் அமைத்து அதை 4 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பாசிரியர்கள் கலந்தாய்வு விரைவில் நடைபெறும். அது முடிந்தவுடன் சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொதுத்தேர்வுகளையும் மாணவர்கள் சந்திக்கும் வகையில் 40 சதவீத பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வருகிற தேர்தலுக்காக கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூத் கமிட்டியில் ஏராளமான இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மத்தியில் உள்ள தேசிய கட்சிகளில் கூட இல்லாத அளவிற்கு அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பேட்டியின் போது நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story