தீபாவளி பண்டிகையையொட்டி: பூக்கள் விலை உயர்வு


தீபாவளி பண்டிகையையொட்டி: பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 4 Nov 2018 10:00 PM GMT (Updated: 4 Nov 2018 11:32 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

கோவை,

பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த காலங்களில் பூக்களின் விலை அதிகரிக்கும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து கோவை பூமார்க்கெட் வியாபாரிகள் சங்க கமிட்டி உறுப்பினர் அருண்சங்கர் கூறியதாவது:-

கோவை பூ மார்க்கெட்டுக்கு தினமும் மல்லிகை, ஜாதிமல்லி, முல்லை உள்பட பல்வேறு வகையான பூக்கள் 30 டன் முதல் 40 டன் வரை கொண்டு வரப்படுகிறது. இங்கு காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து மல்லிகைப்பூ, முல்லைப்பூ, மதுரை நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, செவ்வந்தி, மரிக்கொழுந்து, அரளி, துளசி உள்ளிட்டவை கொண்டு வரப்படுகின்றன.

துடியலூர் பகுதியில் இருந்து பட்டுப்பூ, சாதா ரோஜா, வாடாமல்லி, ஓசூர், ராயக்கோட்டை பகுதியில் இருந்து ரோஜா, செண்டுமல்லி, செவ்வந்தி பூக்கள் கொண்டு வரப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இருந்து சவுக்கு மர இலைகள் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு பூக்கள் அனுப்பப்படுகின்றன.

கோவையை பொறுத்தவரை பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். எனவே அதன் விலையும் உயரும். பூக்களின் வரத்தை பொறுத்து, காலை மற்றும் மதியம் ஆகிய இருவேளையும் விலை நிர்ணயம் செய்யப்படும். கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையான மல்லிகைப்பூ நேற்று ரூ.700 முதல் ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்ட ஜாதி மல்லி ரூ.700, ரூ.80-க்கு விற்கப்பட்ட சாமந்தி ரூ.120, ரூ.80-க்கு விற்கப்பட்ட அரளி ரூ.150, ரூ.60-க்கு விற்கப்பட்ட சம்மங்கி ரூ.100, ரூ.160-க்கு விற்கப்பட்ட பட்டன் ரோஜா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story