புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது


புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2018 10:15 PM GMT (Updated: 5 Nov 2018 12:28 AM GMT)

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு ஏழுமலை, போலீஸ்காரர்கள் ராஜசெல்வம், செந்தில்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அனுமந்தை சுங்கச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் அந்த காருக்குள் 12 அட்டைப் பெட்டிகளில் 192 மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

உடனே காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (வயது 28) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.


Next Story