தீபாவளியன்று இனிப்பு சாப்பிட்டதால் ‘உஷார்’: ரத்த பரிசோதனை நிலையங்களில் குவிந்த சர்க்கரை நோயாளிகள்


தீபாவளியன்று இனிப்பு சாப்பிட்டதால் ‘உஷார்’: ரத்த பரிசோதனை நிலையங்களில் குவிந்த சர்க்கரை நோயாளிகள்
x
தினத்தந்தி 7 Nov 2018 11:15 PM GMT (Updated: 7 Nov 2018 6:50 PM GMT)

தீபாவளியன்று இனிப்பு சாப்பிட்டு விட்டதால், உஷார் அடைந்த சர்க்கரை நோயாளிகள் ரத்த பரிசோதனை நிலையங்களில் சர்க்கரை அளவை பார்க்க திரண்டனர்.

சென்னை,

புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு, பட்டாசு வெடித்தலே தீபாவளி பண்டிகையின் உண்மையான மகிழ்ச்சி ஆகும். என்னதான் இனிப்புகளை விட்டு தூர ஒதுங்கி இருக்கும் சர்க்கரை நோயாளிகள், பண்டிகை நாட்களில் கொஞ்சம் இனிப்புகளை சாப்பிட ஆசைப்படுவது வழக்கம். அந்த ஆசை தீபாவளியன்று பேராசையாக மாறிவிடும்.

எனவே கொஞ்சம் சாப்பிட்டால் தப்பில்லை என்ற ரீதியிலும், நாவை கட்டுப்படுத்த முடியாமலும் சர்க்கரை நோயாளிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு நேற்று விடுமுறை அளித்தனர். அந்தவகையில் நேற்று தித்திக்கும் இனிப்புகளில் தீராத ஆசையால் ருசிபார்த்த சர்க்கரை நோயாளிகள் ஏராளம்.

ரத்த பரிசோதனை கூடங்கள்

எப்போதுமே ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு எவ்வளவு? என்பதில் சர்க்கரை நோயாளிகள் விழிப்புடன் இருப்பார்கள். அந்தவகையில் நேற்று முன்தினம் இனிப்புகள் சாப்பிட்ட மகிழ்ச்சியில் திளைத்த சர்க்கரை நோயாளிகள், நேற்று ‘உஷார்’ அடைந்தனர். இதனால் காலை முதலே வீடுகளின் அருகேயுள்ள ரத்த பரிசோதனை கூடங்களை ஆக்கிரமிக்க தொடங்கினர்.

ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொண்ட பின்னரே சர்க்கரை நோயாளிகள் ஓரளவு நேற்று நிம்மதி அடைந்தனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு கொஞ்சம் கூடியிருந்ததால் அதிர்ச்சி அடைந்த சிலர், அருகில் உள்ளவரின் ஆய்வு முடிவுகளை பார்த்து மனதை தேற்றிக்கொண்டனர்.

அரசு ஆஸ்பத்திரிகளிலும்...

அரசு ஆஸ்பத்திரிகளிலும் நேற்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள ஏராளமானோர் வந்திருந்தனர். அந்தவகையில் சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று 400-க்கும் அதிகமானோர் படையெடுத்தனர். இதில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு மட்டும் 240 பேர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் தங்கள் வீடுகளிலேயே சர்க்கரை அளவை காண்பிக்கும் கருவிகள் மூலம் சுயமாக பரிசோதனை செய்து ரத்தத்தின் சர்க்கரை அளவை சோதித்து கொண்டனர்.

Next Story