கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம்


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம்
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 6:57 PM GMT)

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் கடிதம் அனுப்பினர்.

சென்னை,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளின் கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும். இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.

இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக 4 ஏரிகளின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். அதன்பேரில் செப்டம்பர் மாதம் 22-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது

கடிதம் எழுதினர்

இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 29-ந் தேதி வந்தடைந்தது. கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் 31-ந் தேதி தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி முதல் கடந்த மாதம் 31-ந் தேதி வரை 1.604 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரியை வந்தடைந்தது. கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டதின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை 1.256 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது. போதிய தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்காததால் கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடும்படி ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

கண்டலேறு அணையின் கொள்ளவு 68 டி.எம்.சி. ஆகும். தற்போது கண்டலேறு அணையில் 11 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு குறித்து ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகள் என்ன முடிவு செய்துள்ளனர் என்பது தெரியவில்லை. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 23.30 அடியாக பதிவானது. 617 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் வீதம் இணைப்பு கால்வாயில் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர்வாரியத்துக்கு 20 கனஅடி தண்ணீர் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது.

Next Story