ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு; பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு; பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 7:26 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு ஊராட்சி துலுக்காத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி மைதிலி. இவர்களது மகள் கீர்த்திகா (வயது 22). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வெங்காடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராம் (27). கீர்த்திகாவும், தேவராமும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் பல இடங்களில் தனிமையில் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் தேவராம் பெற்றோருக்கு தெரியவந்தது. அந்த பெண்னை மறந்துவிடும் படி தேவராமை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இந்த நிலையில் கடந்த 6 மாதமாக தேவராம் கீர்த்திகாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். கீர்த்திகா பல முறை சந்திக்க முயற்சி செய்தும் காதலனை சந்திக்க முடியவில்லை.

தற்கொலை

இந்த நிலையில் தேவராமுக்கு உறவுக்கார பெண்னை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவுசெய்து திருமண ஏற்பாடு நடந்தது. காதலன் தேவராமுக்கு திருமண ஏற்பாடு செய்வதை அறிந்த கீர்த்திகா அதிர்ச்சியடைந்தார். கடந்த 5-ந்தேதி காதலன் தேவராம் வீட்டுக்கு சென்று தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்னை திருமணம் செய்வது நியாயமா என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். அதற்கு தேவராம் எனது பெற்றோர் நமது காதலை ஏற்று கொள்ளவில்லை. அதனால் உன்வழியை நீ பார்த்துகொள் என்று கூறி வீட்டைவிட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. தேவராமின் பெற்றோர் கீர்த்திகாவின் பெற்றோரை அழைத்து எங்கள் மகனுக்கு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்துள்ளோம். உங்கள் மகளை கண்டித்து வையுங்கள் என கூறியதாக தெரிகிறது.

இதனால் மனவருத்தம் அடைந்த கீர்த்திகா கடந்த 5-ந்தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர் கீர்த்திகா தூக்கில் உயிருக்கு ஊசலாடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கீர்த்திகாவை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

3 பேர் மீது வழக்கு

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயகம் விசாரணை செய்து கீர்த்திகாவை தற்கொலைக்கு தூண்டியதாக தேவராம், அவரது பெற்றோர் சுந்தரமூர்த்தி, மகேஷ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story