போலீஸ்காரர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி


போலீஸ்காரர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 7 Nov 2018 10:15 PM GMT (Updated: 7 Nov 2018 7:37 PM GMT)

போலீஸ்காரர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், தலை தீபாவளி கொண்டாட வந்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கார்வழி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது 29). இவருக்கும், காந்தி கிராமத்தை சேர்ந்த கிருத்திகாவுக்கும் (25) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தலை தீபாவளிக்காக ரஞ்சித்குமார் தனது மனைவியுடன் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை காந்திகிராமம் பகுதியில் கரூர்-திருச்சி சாலையில் கணவன்-மனைவி இருவரும் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக, பசுபதிபாளையம் அருகேயுள்ள கொளந்தாகவுண்டனூரை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் பாரத் (33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ரஞ்சித்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார் மனைவியின் கண்முன்னே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் பாரத் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராமு மற்றும் போலீசார் விரைந்து வந்து பாரத்தை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ரஞ்சித்குமார், விபத்தில் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story