கள்ளக்குறிச்சியில்: 425 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் - கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்


கள்ளக்குறிச்சியில்: 425 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் - கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்
x
தினத்தந்தி 7 Nov 2018 10:15 PM GMT (Updated: 7 Nov 2018 7:38 PM GMT)

கள்ளக்குறிச்சியில், அரசு பொதுத்தேர்வில் பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்று தந்த 425 ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை மேலும் உயர்த்திட அனைத்து நிலை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சேவியர் சந்திரகுமார், டாக்டர் ஆர்.கே.எஸ். கல்லூரி தலைவர் மகுடமுடி, கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலர் கார்த்திகா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் சிறந்த 4 பள்ளிகளுக்கு கேடயமும், 2017-18-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளில் அரசு பொதுத்தேர்வில் அந்தந்த பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்று தந்த கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 425 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார். 

Next Story