அரசு பஸ் மீது கார் மோதல்: அமைச்சரின் உதவியாளர் 2 மகன்களுடன் பலி கரூரை சேர்ந்தவர்கள்


அரசு பஸ் மீது கார் மோதல்: அமைச்சரின் உதவியாளர் 2 மகன்களுடன் பலி கரூரை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 7:46 PM GMT)

வேப்பூர் அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில், அமைச்சரின் நேர்முக உதவியாளர் 2 மகன்களுடன் பலியானார். இவர்கள் கரூரை சேர்ந்தவர்கள்.

வேப்பூர்,

கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் கூடுதல் சிறப்பு நேர்முக உதவியாளராக பணியாற்றியவர். இவர் சென்னை செங்குன்றத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக லோகநாதன் தனது மூத்த மகன் சிவராமன்(29), மருமகள் ஷாலினி(28), பேரன் லக்‌ஷன்(3) இளைய மகன் நிர்மல்குமார்(26) ஆகியோருடன் தாந்தோன்றிமலைக்கு காரில் புறப்பட்டு வந்தார்.

சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு அனைவரும் நேற்று காலை ஒரு காரில் சென்னை நோக்கி புறப்பட்டனர். காரை லோகநாதன் ஓட்டினார்.

காலை 7 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலம் அருகில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று, திடீரென சாலையின் இடது புறமாக திரும்பியது.

இதனால் லோகநாதன் ஓட்டி வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் லோகநாதன், சிவராமன், நிர்மல்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஷாலினி பலத்த காயமடைந்தார். சிறுவன் லக்‌ஷன் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ஷாலினியை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான லோகநாதன், சிவராமன், நிர்மல்குமார் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு வரும் வழியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் பலியான சிவராமன், நிர்மல்குமார் ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story