பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்கு


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 7:54 PM GMT)

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அரியலூர்,

தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது. இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோளும் விடுத்திருந்தது. தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் போலீசார் சார்பில் இதுதொடர்பாக கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி அன்று பெரம்பலூர் கணபதி நகரில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி மதியம் பட்டாசு வெடித்ததாக, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 35), சங்கர்(22) ஆகிய 2 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியும், தமிழக அரசு பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பட்டாசு வெடித்ததாகவும் பாடாலூர், அரும்பாவூர், கை.களத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா 2 பேர் மீதும், மங்களமேடு, வி.கைகாட்டி, குன்னம் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் போலீஸ் நிலையத்தில் 2 பேர் மீதும், தளவாய், கயர்லாபாத், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, விக்கிரமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒருவர் மீதும் என மொத்தம் 12 பேர் மீது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story