தீபாவளி கொண்டாட்டத்தின் போது தகராறு: கோஷ்டி மோதல்; 13 பேர் கைது


தீபாவளி கொண்டாட்டத்தின் போது தகராறு: கோஷ்டி மோதல்; 13 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2018 10:45 PM GMT (Updated: 7 Nov 2018 7:54 PM GMT)

திருவொற்றியூர் பகுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் இருகோஷ்டியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர், திருச்சினாங்குப்பம் பகுதியை சேர்ந்த சிலர் தீபாவளி பண்டிகையொட்டி, மல்லிகாபுரம் பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் பட்டாசுகளை வெடித்து, வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்டனர்.

இதைக்கண்ட மல்லிகாபுரம் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஒன்று திரண்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருவொற்றியூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது முதலில் பட்டாசு வெடித்து தகராறில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது. அவர்களை பிடிக்க வலியுறுத்தி அங்கு வந்த போலீசாரை மல்லிகாபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர்.

13 பேர் கைது

இதைத்தொடர்ந்து, திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஒண்டி குப்பம் நந்தகுமார்(வயது28), திருச்சினாங்குப்பம் நரேஷ்குமார்(28), அருண் குமார்(29), விக்னேஷ்(19), சின்ராசு(20), விமல்(18), சாமுவேல்(18), அருண் பாண்டியன்(25), சிவகங்கா புரம் தீபக்(20), சன்னதி தெரு கோட்டீஸ்வரன்(19), மார்க்கெட் லைன் அவினேஷ்(18) உள்ளிட்ட 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இன்னொரு தரப்பான மல்லிகாபுரத்தை சேர்ந்த பாத்திமா (32) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இரு கோஷ்டியை சேர்ந்தவர்களில் ஒருகோஷ்டியில் 12 பேரும் மற்றொரு கோஷ்டியில் ஒருவர் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story