அமலாக்கத்துறை வழக்கை சுமூகமாக முடிக்க ரூ.20 கோடி பேரம் முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவு


அமலாக்கத்துறை வழக்கை சுமூகமாக முடிக்க ரூ.20 கோடி பேரம் முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவு
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 8:50 PM GMT)

அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார்.

பெங்களூரு, நவ.8-

அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகர், கே.எச்.பி. மெயின் ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத்.

ரூ.20 கோடி பேரம்

இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி பணம் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார். இதுதொடர்பாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்களை கைப்பற்றி இருந்தார்கள்.

இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக்கும் பதிவானது. இந்த வழக்கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தப்பிக்கவும், பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியின் உதவியை பரீத் நாடியுள்ளார். அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றுவிட்டு, தலைமறைவானது தெரியவந்துள்ளது. இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.600 கோடி மோசடி

பெங்களூரு கே.எச்.பி. மெயின் ரோட்டில் உள்ள ‘அபிடன்ட்‘ என்ற நிதி நிறுவனத்தை சையத் அகமது பரீத் என்பவர் நடத்தி வருகிறார். அவர், தனது நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு 4 மாதங்களுக்கு 40 முதல் 50 சதவீத வட்டி தருவதாக கூறி இருந்தார். இதனால் பரீத் நிதி நிறுவனத்தில் ஏராளமானவர்கள் பணம் முதலீடு செய்திருந்தனர். அவ்வாறு முதலீடு செய்திருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் களுக்கு, பணத்தை திரும்ப கொடுக்காமல் ரூ.600 கோடி வரை பரீத் மோசடி செய்திருந்தார். இதுதொடர்பாக கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கடந்த ஆண்டு (2017) வழக்குகள் பதிவாகி இருந்தன.

பின்னர் அந்த வழக்குகள் அனைத்தும் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பரீத்தையும் போலீசார் கைது செய்தார்கள். அத்துடன் பரீத்தின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து பெங்களூருவில் உள்ள அம்பிகா என்ற நகைக்கடையை நடத்தி வரும் ரமேஷ் கடாரியாவின் வங்கி கணக்கு ரூ.18 கோடி பணம் பறிமாறப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்து பரீத்திடம் விசாரணை நடத்திய போது தான் பல முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

ஜனார்த்தன ரெட்டியிடம் உதவி

அதாவது பரீத் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததுடன், சில முறைகேட்டிலும் ஈடுபட்டு இருந்ததால் கடந்த ஜனவரி மாதம், அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி இருந்தனர். இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து விடுபட பரீத் தீர்மானித்தார். இதற்காக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியை சந்தித்து, அவரது உதவியை பரீத் நாடியுள்ளார்.

ஜனார்த்தனரெட்டியும் பரீத்திற்கு உதவி செய்வதாக கூறியுள்ளார். மேலும் அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்கவும், இந்த வழக்கில் பரீத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் ரூ.20 கோடி பேரம் பேசியுள்ளார். ஆனால் ஜனார்த்தன ரெட்டிக்கு பணமாக கொடுக்காமல், அதனை தங்க கட்டிகளாக பரீத் கொடுத்துள்ளார். இதற்காக பரீத் தனது வங்கி கணக்கில் இருந்து அம்பிகா நகைக்கடையின் உரிமையாளர் ரமேஷ் கடாரிக்கு ரூ.18 கோடியை அனுப்பியுள்ளார்.

57 கிலோ தங்க கட்டிகள்

ரமேஷ் கடாரியும் தங்க நகைகளையோ, தங்க கட்டி களையோ கொடுக்கவில்லை. அவர், அந்த ரூ.18 கோடியை பல்லாரி மாவட்டத்தில் ராஜ்மகால் என பெயரில் நகைக்கடை நடத்தி வரும் ரமேசுக்கு அனுப்பியுள்ளார். இவரது நகைக்கடையில் இருந்து தான் 57 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் ஜனார்த்தன ரெட்டியின் உதவியாளர் அலிகானுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது. ஜனார்த்தனரெட்டி, பரீத்துடன் நடந்த பேரத்தில் ரூ.20 கோடியில், ரூ.18 கோடிக்கு தங்க கட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதி ரூ.2 கோடி பணமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு கோடி ரூபாய் பிரபல தொழில் அதிபர் பிரஜ்ஜேஸ் ரெட்டி என்பவருக்கு சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் பரீத் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தாலும், தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதுபோல, பல்லாரியை சேர்ந்த ராஜ்மகால் நகைக்கடையின் உரிமையாளர் ரமேஷ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டு இருந்தார். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பெங்களூருவில் உள்ள அம்பிகா நகைக்கடையின் உரிமையாளர் ரமேஷ் கடாரியாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை கைது செய்யவில்லை.

4 தனிப்படைகள் அமைப்பு

நிதி நிறுவன அதிபர் பரீத் மீது அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க தனது உதவியாளர் அலிகான் மூலம் ரூ.18 கோடிக்கு 57 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகளை ஜனார்த்தன ரெட்டி பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது. ஜனார்த்தன ரெட்டி, அவரது உதவியாளர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தற்போது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்த கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டிக்கு கைது வாரண்டு எதுவும் கோர்ட்டில் இருந்து பெறவில்லை.

தலைமறைவாக உள்ள ஜனார்த்தன ரெட்டியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பெங்களூரு, பல்லாரி, சித்ரதுர்கா மாவட்டத்தில் ஜனார்த்தன ரெட்டியின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அவரை கைது செய்யவும் தீவிரம் காட்டியுள்ளனர். ஜனார்த்தன ரெட்டியின் உதவியாளர் அலிகானை பிடிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன், ஜனார்த்தன ரெட்டிக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் கூறினார்.

பேட்டியின் போது குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார், துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Next Story