தந்தை கண் முன்: கால்வாயில் இழுத்து செல்லப்பட்ட 2 வாலிபர்களின் உடல்கள் மீட்பு


தந்தை கண் முன்: கால்வாயில் இழுத்து செல்லப்பட்ட 2 வாலிபர்களின் உடல்கள் மீட்பு
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 8:58 PM GMT)

மதுரை அருகே தந்தை கண் முன்பு கால்வாயில் இழுத்து செல்லப்பட்ட 2 வாலிபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

புதூர்,

மதுரை புதூர் பகுதியை சேர்ந்த காசிராஜன் மகன் வரதராஜன் (வயது 23). இவர் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலைபார்த்து வந்தார். பொதும்புவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (21) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காசிராஜன் தனது மகன் வரதராஜன், தினேஷ்குமார் ஆகியோருடன் சத்திரப்பட்டி பெரியாறு பிரதான கால்வாயில் குளிக்க சென்றார்.

அப்போது நீச்சல் தெரியாத காரணத்தால் காசிராஜன் கரையில் உட்கார்ந்து குளித்துக்கொண்டிருந்தார். வரதராஜன், தினேஷ்குமார் ஆகியோர் கால்வாயில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென இருவரையும் தண்ணீர் இழுத்துச்சென்றது. எதிர்பாராத இந்த சம்பவத்தை நேரில் பார்த்த காசிராஜன் கத்தி கூச்சல் போட்டார். அதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இருவரையும் தேடிப்பார்த்தனர்.

வெகு நேரம் தேடிப்பார்த்தும் 2 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலை கதிரவன் தலைமையில் மற்றும் தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

இந்தநிலையில், ஒத்தக்கடை அருகே உள்ள துக்களம்பட்டி பகுதி கால்வாயில் உள்ள தடுப்பணையில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் சிக்கியிருந்தது நேற்று கண்டறியப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பத்தை தொடர்ந்து பெரியாறு பிரதான கால்வாயில் பொதுமக்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

Next Story