நெய்வேலியில்: வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


நெய்வேலியில்: வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Nov 2018 10:00 PM GMT (Updated: 7 Nov 2018 9:44 PM GMT)

நெய்வேலியில் வியாபாரி வீட்டில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெய்வேலி, 

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 35). முந்திரி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டி விட்டு அருகே கீழுர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு, துணிமணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 1¾ பவுன் நகை, ரூ.30 ஆயிரம் மற்றும் கியாஸ் சிலிண்டரை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. திருடு போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story