கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் குடும்பத்துடன் கடலில் குதித்து தற்கொலை செய்வோம்


கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் குடும்பத்துடன் கடலில் குதித்து தற்கொலை செய்வோம்
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 6:42 PM GMT)

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் குடும்பத்துடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கிராம மக்கள், ஆய்வு குழுவினரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த விளாங்குடியில் கொள்ளிடம் ஆறு உள்ளது இந்த ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் தம்புராஜ் தலைமையில் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கணபதி சுப்ரமணியன், பேராசிரியர் புகழேந்தி ஆகியோர் கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் நேற்று காலை முதலே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருவையாறு போலீஸ் துணை சூப்பிரண்டு குலசேகரன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆய்விற்கு வந்த அதிகாரிகள், ஆற்றில் மணல் எடுக்கப்படும் இடத்தை முழுமையாக அளந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்த அதிகாரி களிடம் தனித்தனியாக மனு அளித்து, மணல் குவாரி அமைக்க தங்களின் எதிர்பை தெரிவித்தனர்.

இங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். குடிநீருக்கு கூட தண்ணீர் கிடைக்காது. விவசாய பம்புசெட்டுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள விலங்குகளும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட ஆய்வு குழுவினர், இந்த மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆய்வின் போது பொதுப்பனித்துறை அதிகாரி ராமமூர்த்தி, திருவையாறு தாசில்தார் ராமசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மீண்டும் மணல்குவாரி அமைப்பதற்கு அரசு முற்பட்டால் எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் ரேசன் கார்டு, ஆதார் கார்டு, நிலம், வீட்டு பத்திரங்கள், பட்டாக்களையும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விட்டு அனைவரும் குடும்பத்துடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கிராம மக்கள் கண்ணீருடன் ஆய்வு குழுவினரிடம் தெரிவித்தனர். 

Next Story